எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர்
உற்பத்திகளிலான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த புனரமைப்பை
செயற்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவியுமான
சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார ரீதியாக தன்னிறைவை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார
தன்னிறைவை கொண்டுள்ள வடமாகாணத்தை எற்படுத்தல் என்னும் கருப்பொருளில் அரச
அதிகாரிகளுடனான உயர் மட்டக்கலந்துரையாடல் திருநெல்வேலியில் உள்ள தின்ன
விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் முன்னாள்
ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா
குமாரதுங்க, மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமராசாமி
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சந்திரிக்கா குமாரதுங்க, “நாட்டின் வலுவாக ஐக்கியத்தை சம
பங்கான அபிவிருத்திகளை முன்னெடுக்க அரச நிர்வாகத் துறை சார்ந்த அதிகாரிகள்
எதிர்காலத்தில் முன்வர வேண்டும். எமது நாட்டின் பொருளாதார ரீதியான
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்த
வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் அந்நிய செலவினங்கள் 71 வீதமாக
இருந்துள்ளது. தற்போது 05 வீதத்தினால் மாத்திரம் உயர் நிலையில் உள்ளது.
எனவே, எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
உள்ளூர் உற்பத்திகளிலான சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுக்கு
இணங்க நாங்கள் ஒருங்கிணைந்த புனரமைப்பை செயற்படுத்தயுள்ளோம். வட
மாகாணத்தில் அதற்காக நாம் புதிய நடைமுறையிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க
எதிர்பார்த்துள்ளோம்.
அதுவும் தொழில்சார் விடயங்கள், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்கள்,
பொருளாதார ரீதியான கட்டமைப்புகள் போன்ற விடயங்களில் எதிர்காலத்தில் கவனம்
செலுத்தவுள்ளது.
எமக்கான நாட்டின் பொருளாதாரத் தன்மையினை நாங்கள் முன்னேடுக்க வேண்டும்.
அந்த வகையில் புலம் பெயர்ந்த கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டியது காலத்தின்
அவசியமாகின்றது.
