கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்
அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும், தொன்மை வாய்ந்ததும், மலைகளால் இயற்கை அரண்
அமைக்கப்பட்டதும், 'சின்னக் கதிர்காமம்' என சிறப்பித்துக்
கூறப்படுவதுமாகிய தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று
நடைபெறுகிறது.
'தா' என்றால் 'இந்தா' என்று வழங்கும் தாந்தாமலை
முருகன் ஆலயம் எழில் கொஞ்சும் கிழக்கு மாகாணத்தில் மீனினங்கள் கவிபாடும்
மட்டக்களப்பில் அமைந்துள்ளது.
படுவான்கரையில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஒரு எல்லையிலும், அம்பாறை மாவட்டத்திற்கு அயலிலும்,
கொக்கட்டிச்சோலை
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து 10மைல் கல் தொலைவில் காடும் காடு
சார்ந்த பிரதேசமும், மலையும் மலை சார்ந்த பிரதேசமும், வயலும் வயல் சார்ந்த
பிரதேச நிலமும் சூழ அமையப்பெற்றுள்ள இடமே தாந்தாமலை.
அங்கு எழுந்தருளி அருள் மழை சொரியும் முருகப் பெருமானின் ஆலயம், வரலாற்று தொன்மை வாய்ந்தது.
இவ்வாலயத்தின்
வரலாறு கூத்திகன் - சேனன், உலகநாச்சி, ஆடகசௌந்தரி, குளக்கோட்டன்
ஆகியோருடன் தொடர்பு பட்டு நிற்பதை வரலாற்றுச் சான்றுகளும் கர்ண பரம்பரைக்
கதைகளும் சான்று பகிர்கின்றன.
ஆதியில் திராவிடர்களின் மரபு
வழிபாட்டுடன் தொடர்புடையதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் வழிபாடும்,
திறந்த வெளிக்கோயிலாக தந்தா மலையும் இருந்ததாக கர்ண பரம்பரைக் கதைகளூடாக
அறியமுடிகின்றது.
தாந்தா மலையின் உச்சியில் சிலந்தி மரம் ஒன்றும்
அதனடியில் பிள்ளையார் சிலையொன்றும் இருந்தது என்பதை
அறியக்கூடியதாகவுள்ளதோடு, கதிர்காம யாத்திரியர்களின் வழிபாட்டு தலமாக
தாந்தா மலை இருந்துள்ளது.
ஆடக சௌந்தரி ஆட்சி காலத்தில் தாந்தா மலை
ஆலயத்தை தரிசித்ததாகவும், மாளிகை அமைத்து தங்கி இருந்ததாகவும் கர்ண பரம்பரை
கதைகள் கூறுகின்றன. இதற்குச் சான்றாக
இன்றும் இரசதானி அமைந்திருந்த தடயங்களும் கற்றூண்களும் மற்றும்
சிற்பவேலைப்பாடுகள் சிதைந்து அழிந்த கற்களும் காணக்கிடக்கின்றன.
இப்பிரதேசம் மலையும் மலை சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமுமாக உள்ளதால் அதிகளவான மக்கள் மழையை நம்பி விவசாயம் செய்கின்றனர்.
அதனடிப்படையில்
மழை இல்லாத காலத்தில் மலைப்பிள்ளையாருக்கு பொங்கல் வைத்து பூஜை செய்ததால்
மழை பொழிந்து இன்புற்ற வரலாறுகள் உள்ளதுடன், அது இன்றும் வழக்கத்தில்
உள்ளதை காணமுடிகின்றது.
1956க்கு பின் தாந்தா மலை வழிபாடு
1956ம்
ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் தமிழ் மக்களால் பாரம்பரியமாக வழிபட்டு வந்த
கதிர்காமத் தீர்த்த யாத்திரையில் பெரும் சங்கடத்தையும், தடையையும் ஏற்படுத்தியது.
இதனால்
கதிர்காமக் கந்தனை தாந்தா மலையில் கண்டு வழிப்பட்டதாக கூறப்படுவதோடு,
இன்னோர் பக்கம் தாந்தா மலை ஆலயம் கவனிப்பாரற்று காடு சூழ்ந்து இருந்தபோது,
அங்கிருந்த கட்டடங்களும் வழிபாட்டு இடங்களும் அழிந்திருந்தன.
அத்தோடு வழிபாடு இல்லாமல் போய் இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில்
முனைக்காட்டினைச் சேர்ந்த கா.பாலிப்போடியார் எனும் அன்பருக்கு கனவிலே
தோன்றிய முருகப்பெருமான் தாந்தா மலை எனும் இடத்தில் அடர்ந்த
காட்டுப்பகுதிக்குள் தான் அமைந்திருப்பதாகவும், அந்தக் காட்டை வெளியாக்கி
துப்பரவு செய்து ஆடித் தீர்தோற்சவத்தை செய்யுமாறும் கூறி மறைந்தாரம்.
இத்தகையதொரு நிலையில் தான் தாந்தா மலை காட்டினை முனைக்காட்டுக்
கிராமத்தைச் சேர்ந்த க.மாமாங்கப்பிள்ளை, கு.வ.சின்னத்தம்பி, கா.பாலிப்போடி,
வைத்தியர் தா.பிள்ளையாப்போடி, பெ.பொன்னம்பலம், சீ.பூபாலபிள்ளை,
முதலைக்குடாவைச் சேர்ந்த வ.வி.வெ.கனகபைப்போடி ஆகிய அன்பர்கள் காட்டினை
வெட்டி வெளியாக்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து மகிழடித்தீவைச் சேர்ந்த
அன்பர்களான வே.உ.குமாரசிங்கம் கதிரவேலாப்போடி, ந.கனகசபை ஆகியோரும்
அப்பணியில் இணைந்திருக்கின்றனர். அதன் பின் தொடர்ச்சியாக திருவிழாக்கள்
இன்று வரை நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தாந்தா மலையை சாந்தமலை,
தாண்டவகிரி, பொக்கிச மலை என்றும் அழைப்பர்.
ஆலய அமைப்பு
ஆலயம்
ஆரம்ப காலத்தில் மலைக் கோயிலாகவும், பின்னர் கொத்துப்பந்தலாகவும்
அமைந்திருக்கின்றது. பின்னர் அக்கால ஆலயங்கள் அழிந்தன. பிற்பாடு
மலையடிவாரத்தில் முருகன் ஆலயம் அமைக்கப்பட்டது.
அதனை சுற்றி
நாகதம்பிரான் ஆலயம், தெய்வானை அம்மன் ஆலயம், விஸ்ணு ஆலயம், வள்ளியம்மன்
ஆலயம், முத்துலிங்கேஸ்வரர் ஆலயம் எனும் கோயில்களும் மலை உச்சியில்
பிள்ளையார் ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழா
ஒவ்வொரு
வருடமும் ஆடிப்பூரணையில் திருகோண நட்சத்திரத்தில் இடம்பெறும்
தீர்த்தோற்சவத்தையும், திருவிழாக்களின் எண்ணிக்கையையும் மையமாகக் கொண்டு
உற்சவம் இடம்பெறும்.
நிர்வாக அமைப்பு
முதலாவது
செயற்குழு 1956ம் ஆண்டு ஆடிமாதம் ஆரம்பிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மார்கழி
மாதம் 9ம் திகதி நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
அதன்பின் பல
தடவைகள் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டும் இடையில் தான்தோன்றீஸ்வரர் ஆலய
நிர்வாக சபையின் கீழும் இயங்கி வந்த நிர்வாக அமைப்பானது மீண்டும் 1981ம்
ஆண்டு தொடக்கம் பரவலான நிர்வாக அமைப்பின் கீழ் தாந்தா மலை ஸ்ரீ
முருகப்பெருமான் ஆலய நிர்வாகம் தொடர்ந்து மும்மூன்று வருடங்களுக்கொரு முறை
தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நித்திய நைமித்திய பூசைகளும், விழாக்களும்
தினமும்
மதியத்தில் நடைபெறும். விசேட காலங்களில் விசேட பூசைகள் நடைபெறும் அவை
தைப்பொங்கல், தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, சித்திரை வருடப்பிறப்பு, சித்திரைக்கதை,
வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடிமகம், தீபாவளி, கந்தசஷ்டி,
விநாயகர்காப்பு, திருவெம்பாவை போன்றவை இவ்வாலயத்தில் இன்றும் மிகச்சிறப்பாக
இடம்பெற்று வருகின்றன.
தீர்த்தோற்சவம்
வருடந்தோறும்
முருகன் ஆலயத்தில் கொடியேறி ஆடிப்பூரணையில் திருவோண நட்சத்திரத்தில்
தாந்தா மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில்
தீர்த்தோற்சவம் நடைபெறுகின்றது.
இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடினால் எம்மை பீடித்துள்ள நோய்கள்,
துன்பங்கள் நீங்கிவிடும் என்பது நீண்ட காலமாக மக்கள் மத்தியில் நிலவி வரும்
நம்பிக்கையாக காணப்படுகிறது.
ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 17.07.2017 ஆரம்பமாகியிருந்த
நிலையில் இன்று 07.08.2017 திங்கட்கிழமை தீர்த்த உற்சவத்துடன் விழா இனிது
நிறைவு பெறவுள்ளது.


