மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீட்டினை இலக்குவைத்து வெடிபொருட்களை வைத்தவர் என்று தேடப்பட்டு வந்த சந்தேக நபர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில், கடந்த ஆறாம் திகதி இரண்டு வீட்டினை இலக்கு வைத்து வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேரம் கணித்து வெடிக்கும் வகையில் குறித்த குண்டுகள் பொறுத்தப்பட்டிருந்ததுடன், அருகில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையும் தொங்கவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், விசாரணைகள் மேற்கொண்டு வந்த காத்தான்குடி பொலிஸார் குண்டு வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி 3 கதிர்காமம் வீதியை சேர்ந்த ஆனந்தராஜா பிரியராஜ் என்ற 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.