மாவீரர்தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள்
தமிழர்கள் செறிவாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கிலும் தீவிரமாக
இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியாவில் குறிப்பிட்டு கூறும் வகையில்
எந்தவிதமான ஏற்பாடுகளும் இடம்பெறாத நிலையே காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள
எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு
மாவீரர் துயிலுமில்லமான ஈச்சங்குள துயிலுமில்லம் இலங்கை இராணுவத்தின்
611ஆவது படைப்பிரிவின் தலைமையகமாக இயங்கி வருகின்றது.
இதன்காரணமாக, துயிலுமில்ல வளாகத்தினுள்
எவ்வித அஞ்சலி நிகழ்வும் செய்யமுடியாத நிலையில் துயிலுமில்லத்திற்கு
அருகாமையில் மாவீரர்களை நினைவுகூர்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும்
கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் அஞ்சலி நிகழ்வினை
ஏற்பாடுசெய்ய முயற்சித்தவர்களில் ஒருவரான ஜனநாயகப் போராளிகள் கட்சியின்
ஊடகப்பேச்சாளர் துளசி அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது,
ஈச்சங்குள துயிலுமில்லத்திற்கு
அருகாமையில் மாவீரர்களை நினைவுகூர எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை
எனவும் வவுனியா மாவட்ட மக்கள் வவுனியாவிற்கு அருகாமையில் உள்ள
பெரியபண்டிவிரிச்சான், வன்னிவிளாங்குளம் போன்ற மாவீரர்
துயிலுமில்லங்களுக்கு செல்லுமாறும் கூறியுள்ளார்.
நிலைமையை அறிய ஈச்சங்குளப்பகுதிக்கு சென்ற எமது ஊடகவியலாளர்கள் அங்குள்ள மக்களை வினவியபோது,
இங்கு எந்த ஏற்பாடுகளும் இடம்பெறவில்லையென
கூறியதோடு இராணுவ புலனாய்வாளர்கள் மாவீரர்தின ஏற்பாடுகள் குறித்து
விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
