பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் வரை பாதிக்கப்பட்டது.
பதுளை - கொழும்பு பிரதான ரயில் பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப் பகுதிக்கு அருகாமையில், 115வது மைல் கட்டைப் பகுதியில் நேற்று (20) இரவு 11.00 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில், தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பின் பாதிப்பேற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டனர்.
எனினும், இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக, தலவாக்கலை ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இரவு நேர தபால் ரயில் கொழும்பை நோக்கி புறப்பட்டது.
நேற்று மலையக பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாகவே இவ்வாறு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
