புங்குடுதீவு
பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை சென்ற
மாணவியான சிவலோகநாதன் வித்தியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 13 சந்தேக
நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் 9 பேர் எதிரிகளாக
இனங்காணப்பட்டனர்.
முதலாம்
எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3 ஆம் எதிரியான
பூ.தவக்குமார், 4 ஆம் எதிரியான ம.சசிதரன், 5 ஆம் எதிரியான
நி.சந்திரகாந்தன், 6 ஆம் எதிரியான சி.துசாந்தன், 7 ஆம் எதிரியான
ப.குகநாதன், 8 ஆம் எதிரியான ஜெ.கோகிலன், 9 ஆம் எதிரியான ம.சசிகுமார்
ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றச்சாட்டு பத்திரம்
யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான
வழக்கை நீதாய விளக்க நீதிமன்றில் (ட்ரயலட்பார்) விசாரணையை மேற்கொள்ள
சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்தது, இதனடிப்படையில் பிரதம
நீதியரசரால் நீதாய விளக்க நீதிமன்றுக்கு மூன்று நீதிபதிகள்
நியமிக்கப்பட்டனர்
வவுனியா
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை
மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்க
மன்று யூன் மாதம் முதல் விசாரணைகள் நடைபெற்றன.
,2015
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன்
வித்தியா என்ற மாணவியை கற்பழிக்கும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு
சதித்திட்டம் தீட்டியமை, பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்தியமை,
கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்தமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து
கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும், மேற்குறித்த குற்றங்களுக்கு
உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட 41
குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டன.
கடந்த
சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின்
தொகுப்புரை மற்றும் எதிர்த்தரப்பின் தொகுப்புரை என்பன ட்ரயல் அட் பார்
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. இரு தரப்பு தொகுப்புரைகளும்
முன்வைக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு இம்மாதம்( 27) அறிவிக்கப்படுமென
நீதிபதிகள் குழு குறிப்பிட்டிருந்தது.
சுவிஸ்
குமார் என்ற சந்தேகநபர் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு இலஞ்சம் கொடுக்க
முற்பட்டதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்து. இக்குற்றச்சாட்டுத்
தொடர்பில் யாழ் மாவட்டத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித்
ஜயசிங்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
