கிழக்கு மாகாணமானது முதலீட்டுக்கு தேவையான பல வசதி வாய்ப்புக்களை கொண்டு காணப்படுவதாகவும் அதிகமாக பயன்படுத்தப்படாத காணிகள் வெறுமனே இருப்பது இம்முதலீட்டு செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக அமைவதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித பேகொல்லாகம தெரிவித்தார்.
ஓய்வூதியம் பெற்றவர்கள் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உங்களுடைய பங்களிப்பை வழங்குதல் வேண்டும். விஷேடமாக தனியார் துறையிலே இணைந்து செயற்படல் , காத்திரமான தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் இச்செயற்பாட்டை மேலும் வலுவுள்ளதாக மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றங்களை மேற்பார்வை செய்வதற்கு குழு அவசியமென்றும் சில உள்ளுராட்சி மன்றங்களிலே ஒளிராமல் இருக்கின்ற மின் விளக்குகளை மாற்ற முடியாமல் இருக்கின்ற செயலாளர்கள் இருக்கின்ற போது அப்பிரதேசத்தினுடைய ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்து தீர்க்க முடியுமென்று கேள்வியெழுப்பியதுடன் உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு வழங்குகின்ற சேவையை மகத்தான சேவையாக மாற்றியமைக்க இம்மேற்பார்வை குழு பல்துறை சார் உத்தியோகத்தர்களை இணைத்து அமைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலகிலே தற்கொலை முயற்சிகளை அதிகளவில் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் காணப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் இவ்விடயத்தில் முதன்மை பெறுவது கவலைக்குரியது எனவும் இந்நிலையை மாற்றியமைக்க ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக உளநலப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கு துறைசார் நிபுணர்களுடைய ஒத்துழைப்பு அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பொது நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபே குணவர்தன மற்றும் ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
