(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்கள் புனரமைப்பு.

பொலன்னறுவை ஹிங்குராங்கொடை யோத எல மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
'எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 11.45 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை விமானப் படையினர் அதற்கான மனித வள பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றையும் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் விவசாய சமூகத்திற்கு முன்னைய எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உலர் வலயத்தில் 2400 குளங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டும் 123 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 60 வருடங்களுக்கும் மேலாக மாவட்டத்தில் உள்ள மக்கள் முகங்கொடுத்த நீர் தொடர்பான பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் நிரந்தரமாக தீர்த்துவைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 240 பாடசாலைகளில் 142 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வித்துறைக்கு தேவையான வசதிகளை வழங்குவதைப்போன்று பரீட்சைகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் உள்ள பலவீனங்களை இனங்கண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர் ஒருவருக்கு ஜனாதிபதி பரிசுப் பொருள் ஒன்றை வழங்கி வைத்தார். பாடசாலையின் ஆசிரியர் ஒருவரின் படைப்பொன்றை அதிபர் டப்ளியு.ஜி.கருணாதாச ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்;த நிகழ்வில் மகா சங்கத்தினர் உட்பட பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை