ஐரோப்பாவில் வீசும் கடுமையான பனிப்புயலால் ஸ்காட்லாந்து, சுவிற்சலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நகரங்களை வெண்பனி போர்த்தியுள்ளது.
சாலைகள், விமான நிலையங்களிலும் பனி உறைந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய கண்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.
பிரெஞ்ச், பாரிஸ் அரசுகள் வீடற்ற 3 ஆயிரம் பேருக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன.
அதிகப்படியான பனிப்பொழிவால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகப்படியாக போலந்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவில் 7 பேர், செக்குடியரசில் 6 பேர், லிதுவேனியாவில் 5 பேர், பிரான்ஸில் 4 பேர், செர்பியா, இத்தாலி, ஸ்லோவேனியா, ரொமானியாவில் தலா 2 பேர், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
பனிப்போர்வையால் சுவிற்சலாந்தின் ஜெனிவா விமான நிலையம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மற்றும் எடின்பர்க் விமான நிலையங்களும் ஸ்தம்பித்தன.
தெற்கு பிரான்சில் 2 ஆயிரம் கார்கள் ஹெரால்ட் பகுதியில் கடுமையான பனியால் சாலைகளில் உறைந்து கிடக்கின்றன.
இந்த மோசமான பனிப்புயலுக்கு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பெயரை வைத்துள்ளன.
பிரிட்டன் 'கிழக்கில் இருந்து வந்த பீஸ்ட்' என்றும் டச் சைபீரியன் பியர் என்றும், ஸ்வீடன் ஸ்னோ கேனான் என்று அழைக்கிறது.